ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.! 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல் ” எனும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது . அதே போல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். தற்போது காங்கிரஸ் கட்சியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் உயர்மட்ட குழுவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!

அதில்,  ஒரே நாடு ஒரே தேர்தல் என்று திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இது இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி உத்தரவாதங்களுக்கு எதிரான ஜனநாயக விரோத செயல் என்றும், இந்த திட்டமானது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்றும்,  மத்திய அரசின் உயர்மட்ட குழுவின் செயலாளர் டாக்டர் நிதின் சந்திராவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 4 பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில் முக்கியமாக குறிப்பிட்டப்பட்டுள்ள தகவலின்படி, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளுக்கும், அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிதி சேமிப்பு ஏற்படும் என்று உங்கள் (பாஜக) எண்ணத்தை கண்டு காங்கிரஸ் மகிழ்ந்துள்ளது.

2018 மக்களவை தேர்தலின் செலவு 3,820 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்துவதற்கு செலவு மிக அதிகம் என்ற வாதம் ஆதாரமற்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஐந்து ஆண்டுகளாக மொத்த யூனியன் பட்ஜெட்டில் 0.02 சதவீததிற்கும் குறைவாகவே செலவாகும். மாநில சட்டசபைகளுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும் போது, தேர்தல் செலவு முழுமையாக அந்த மாநிலங்களை சேரும். சட்டமன்ற தேர்தலுக்கான செலவுகள் அவர்களின் மாநில வரவு செலவுத்திட்டத்தில் இதே சதவீதமாக கூட இருக்கலாம். எப்படி கணக்கிட்டாலலும் தேர்தல் செலவு நிதிநிலையினை பெரிதாக பாதிக்கப்போவதில்லை.

2016 முதல் 2022 ஆண்டு வரையில் பாஜக 10,122 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. அதில் 5,271 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிதி நிலைமையை வெளிப்படையாக கூறினால் நன்றாக இருக்கும். அது உண்மையிலேயே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

ஒரு மாநில முதலமைச்சர் நம்பிக்கை இழந்து, வேறு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அந்த மாநிலத்தை குடியரசுத்தலைவர் ஆட்சி செய்யும் நிலை ஏற்படும். அது அப்போது தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு செய்யும் ஒரு துரோகமாகவே இருக்கும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.